தமிழ்நாடு

tamil nadu

World Earth Day: போட்டியில் மகள் ஜெயிக்க தந்தை செய்த செயல்.. நெல்லையில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

By

Published : Apr 22, 2023, 7:43 PM IST

நெல்லையில் நடைபெற்ற உலக புவி தின கோலப்போட்டியில், மகள் வெற்றி பெற தந்தை செய்த செயல் நெகிழ்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை - மகள் பாசத்தால் உண்டான உலக புவி தினம்
தந்தை - மகள் பாசத்தால் உண்டான உலக புவி தினம்

நெல்லையில் நடைபெற்ற உலக புவி தின கோலப்போட்டியில், மகள் வெற்றி பெற தந்தை செய்த செயல் நெகிழ்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி: உலக புவி தினம்(World Earth Day) ஆண்டுதோறும் ஏப்ரல் 22ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உலக புவி தினத்தை ஒட்டி, நெல்லையில் மாவட்ட அறிவியல் மையம் சார்பில் விழிப்புணர்வு கோலப்போட்டி அறிவிக்கப்பட்டது. இதில் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், தங்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு கோலம் வரைய அழைக்கப்பட்டு இருந்தனர்.

அதன்படி, இன்று கொக்கிரக் குளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மைய வளாகத்தில் நடைபெற்ற கோலப் போட்டியில், 10 மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு கோலம் வரைந்தனர். 'எதிர்கால நலனுக்காக நாம் பூமிக்கு எதை முதலீடாக கொடுக்கப் போகிறோம்' என்ற தலைப்பில் அனைவரும் பல்வேறு கருத்துக்களுடன் கோலம் வரைந்தனர்.

குறிப்பாக, புதுப்பிக்கத்தக்க சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுப்பது, மரங்களை அழியாமல் பாதுகாப்பது போன்ற விஷயங்களை வலியுறுத்தி, மாணவர்கள் குடும்பத்தினரின் உதவியோடு கோலம் வரைந்தனர். பெரும்பாலான மாணவிகள் தங்களது அம்மாக்களை அழைத்து வந்தனர்.

ஆனால், பாளையங்கோட்டை குமரேசன் நகரைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவி லிசன்யா மட்டும், தனது தந்தை உடன் இணைந்து கோலம் வரைந்த சம்பவம் அங்கு இருந்தவர்களை திரும்பிப் பார்க்கச் செய்தது. அதாவது, லிசானியின் தந்தை செந்தில் குமார் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதேபோல், அவரது தாய் அரசு மருத்துவனையில் செவிலியராக பணி புரிந்து வருகிறார்.

இந்த நிலையில், அத்தியாவசியப் பணி காரணமாக லிசானியின் தாய், கடைசி நேரத்தில் தனது மகள் கலந்து கொள்ளும் கோலப் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. இதனால் சற்று மனம் உடைந்த லிசானிக்கு, அவரது தந்தை செந்தில்குமார் ஆறுதல் கூறி, தானே நேரில் வந்து போட்டியில் கலந்து கொள்வதாகக் கூறியுள்ளார். அதன்படி, லிசானியும், அவரது தந்தை செந்தில்குமாரும் இணைந்து, கோலம் வரைந்தனர்.

பூமிக்கு அடியில் கிடைக்கும் பொருட்களான மணல், தண்ணீர் மற்றும் எண்ணெய் போன்ற புதுப்பிக்க முடியாதப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, சூரிய வெளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் என்ற புதுப்பிக்கத்தக்கப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் விழிப்புணர்வு கோலம் வரைந்தனர். மேலும், கோலத்தின் மீது காற்றாடி மரம் போன்ற இயற்கையான சூழலையும் காட்சிப்படுத்தி இருந்தனர்.

செந்தில்குமார் பெயர் அளவுக்கு இல்லாமல், தொடக்கம் முதல் கடைசி வரை தனது மகளுக்கு பக்க பலமாக இருந்து, அவருக்கு உதவியாக கோலம் வரைந்தார். புள்ளி வைத்ததில் தொடங்கி, வண்ணம் தீட்டுதல் வரை அனைத்தையும் துணை நின்று நடத்திக் கொடுத்தார். இதன் காரணமாக போட்டி முடிவில் லிசானி வரைந்த கோலம் முதல் இடம் பிடித்தது. இதனைத் தொடர்ந்து லிசானிக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:சுட்டெரிக்கும் வெயிலில் மூச்சு வாங்க நடந்து சென்ற கர்ப்பிணி - ஓடி சென்று உதவிய பெண் காவல் உதவி ஆய்வாளர்!

ABOUT THE AUTHOR

...view details