சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் பொதுமக்கள் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கிய இந்தக் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கியது.
மேலும் இந்தக் கரோனா வைரஸ் தமிழ்நாட்டிற்குள் பரவாமல் இருப்பதற்காகத் தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை, காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இந்தக் கரோனா வைரசின் தாக்கம் கேரள மாநிலத்தில் அதிகமாகக் காணப்படுவதால் தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதியான தேனி மாவட்டம் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு போன்ற வழித்தடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டில் உள்ளே வரக்கூடியவர்கள் தீவிர பரிசோதனைக்குள்படுத்தப்பட்ட பின்னரே அனுமதியளிக்கப்பட்டுவருகிறது.
தமிழ்நாடு அரசு சார்பாக லோயர்கேம்ப் பகுதி, கம்பம்மெட்டு அடிவாரப்பகுதி, போடி மெட்டு முந்தல் சோதனைச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்றுமுதல் பிற மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்குள் வரும் பொதுமக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகத் தமிழ்நாடு அரசு சார்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.