மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்கத்தின் சார்பில், வேளாண் உற்பத்தி பொருள்கள், விவசாயிகளுக்கு உத்தரவாதம் மற்றும் வேளாண்மை சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் 2020 ஆகியவற்றைக் கண்டித்து நேற்று(ஜூன்10) நாடு தழுவிய சட்ட மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் தேனியில் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்த விவசாய சங்கத்தினர் டாக்ஸி ஸ்டாண்ட் அருகில் நின்று விவசாய சட்ட திருத்த மசோதா 2020, இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவது உள்ளிட்டவைகளை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
இதில் தேனி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், விவசாயிகள் சங்கச் செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர். இறுதியாக சட்ட திருத்த மசோதா நகலை தீயிட்டு எரிக்க முயன்றனர்.
அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியினர் சட்ட நகலை எரிக்க முயன்றபோது, காவலர் ஒருவர் அந்த நகல் முழுமையாக எரிவதற்குள் அதை தண்ணீர் ஊற்றி அணைத்ததால், ஆத்திரமடைந்த தேனி மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணன் அவ்வாறு செய்த காவலரை நெஞ்சில் கை வைத்து அழுத்தி தள்ளிவிட்டார்.
இதில் நிலைதடுமாறி கீழே விழப்போன காவலர், நல்வாய்ப்பாக திடமாக நின்று கொண்டார். சீருடையில் இருந்த காவலரை நெஞ்சில் கை வைத்து தள்ளியதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
காவலரைத் தள்ளும் மாவட்டச் செயலாளர் அதன் பின்னர் சட்ட மசோதா நகலை போராட்டக்காரர்கள் முழுவதும் தீயிட்டு எரித்தனர். இதனைத் தொடர்ந்து நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:சட்ட நகலை எரிக்கலாமா? விவசாயியை குண்டுக்கட்டாகத் தூக்கிய காவல்துறை!