தேனி மாவட்டத்தில் அரண்மனைப் புதூர், கோட்டைப்பட்டி, பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி, ஆதிபட்டி, கோட்டூர் மற்றும் சீலையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200ஏக்கருக்கு மேலான பரப்பளவில் வெண்டைக்காய் சாகுபடி நடந்து வருகிறது. 45 நாள்களில் அறுவடைக்கு தயாராகும் குறுகிய கால பயிர் என்பதால் விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இதனிடையே, தீபாவளி பண்டிகை நேரத்தில் சராசரியாக 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனையான வெண்டைக்காய்க்கு தற்போது போதிய விலை கிடைக்காததால் அதனை கொள்முதல் செய்த வியாபாரிகள் சந்தைகளில் இருப்பு வைக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால், ஏல சந்தையில் தேக்கமடைந்த சுமார் 7டன் வெண்டைக்காய்களை வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் கொட்டினர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக தகவலறிந்த தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் சந்தைக்கு சென்று ஆய்வு செய்து, வியாபாரிகளிடம் விசாரித்தனர். இதுகுறித்து, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பாண்டியன் கூறுகையில், "விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கவும், இங்கு விளையும் வெண்டைக்காய்களை பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்காக தோட்டக்கலைத் துறை மூலமாக எடுத்துச் செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என நம்பிக்கை தெரிவித்தார்.