தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவர் ஜீவித் குமார் வீடியோவால் புதிய சர்ச்சை!

தேனி: நீட் தேர்வில் வெற்றி பெற்றது தொடர்பாக சபரிமாலா, மாணவர் ஜீவித் குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள மாறுபட்ட கருத்துகளால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

By

Published : Oct 19, 2020, 6:11 PM IST

மாணவர் ஜீவித்குமார்
மாணவர் ஜீவித்குமார்

நீட் தேர்வில் வெற்றி பெற்று இந்திய அளவில் சாதனை புரிந்த தேனி மாணவர் ஜீவித் குமாரை பாஜகவினர் மிரட்டி வருவதாக சபரிமாலா வீடியோ பதிவிட்டிருந்தார். இதனை மறுத்துள்ள மாணவர் ஜீவித் குமார் என்னை யாரும் மிரட்டவில்லை எனப் பதில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் வெளியான நீட் தேர்வு முடிவில் அரசுப்பள்ளி மாணவர்கள் தரவரிசையில் 664 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் தேனியைச் சேர்ந்த மாணவர் ஜீவித் குமார் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி எம்.பி.ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தனர்.

ஜீவித் குமார் வீடியோ

மேலும் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் நேரில் வாழ்த்தி, மாணவனுக்கு நினைவுப் பரிசாக புத்தகம் வழங்கினார்.‌ மேலும் பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் மாணவர் ஜீவித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தவிர, அரசுப் பள்ளி மாணவரே நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனைப் படைத்து விட்டார், இதனால் நீட் தேர்வில் வெற்றி பெறுவது சுலபம் என்று சிலர் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர். இதற்கு நீட் தேர்வு எதிர்ப்பாளர்கள் பதில் கருத்தை தெரிவித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாணவர் ஜீவித் குமாரை பாஜகவினர் சிலர் மிரட்டி வருவதாக அரசுப்பணியை துறந்த ஆசிரியை சபரிமாலா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.‌ இதனை மாணவர் ஜீவித் குமார் மறுத்துள்ளார்.

சபரிமாலா வீடியோ

இது தொடர்பாக ஜீவித் குமார் வெளியிட்டுள்ள வீடியோவில், 'நீட் தேர்வை எதிர்கொள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படிப்பதற்கு உதவிய எனது பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் நிதியுதவி அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நீட் தேர்வில் வெற்றி பெற்ற என்னைப் பலரும் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கின்றனர். பாஜகவினர் என்னை மிரட்டி வருவதாக சபரிமாலா வீடியோ பதிவிட்டுள்ளார்‌. இது முற்றிலும் தவறானது. அப்படி யாரும் என்னை மிரட்டவில்லை' எனத் தெரிவித்தார்.

மேலும் என்னை தத்தெடுத்திருப்பதாக சபரிமாலா கூறி வருகிறார். 1 முதல் 12ஆம் வகுப்பு வரை கஷ்டமான சூழ்நிலையிலும் பெற்றோர் தான் என்னை படிக்க வைத்தனர். என்னை யாருக்கும் அவர்கள் தத்துகொடுக்கவில்லை. எனவே, என்னை தத்தெடுத்திருப்பதாக சபரிமாலா கூறி வருவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நான் பயன்படுத்திய ஓஎம்ஆர் சீட் இது இல்லை - கண்ணீர் வடிக்கும் கோவை மாணவர்

ABOUT THE AUTHOR

...view details