கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டுக்கு சென்றவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தேனி மாவட்டத்திலுள்ள தேனி, போடி, சின்னமனூர், பெரியகுளம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து டெல்லியில் நடைபெற்ற மாநாட்டுக்கு 23 நபர்கள் சென்று வந்திருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மாநாட்டுக்கு சென்ற அனைவரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டு கரோனா ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (ஏப்ரல் 1ஆம் தேதி) திடீர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சுகாதாரத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட 5 முக்கிய துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும், வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
மேலும், டெல்லி மாநாட்டுக்குச் சென்று மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 23 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டால் அவர்கள் வசித்து வந்த பகுதிகளிலிருந்து 7 கி.மீ தூரத்துக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளை சேர்ந்தவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.