நீலகிரி மாவட்டம் குன்னூர்ப் பகுதியில் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் சிம்ஸ் பார்க், டால்பின் நோஸ் போன்ற பகுதிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகள் ஆகும். இப்பகுதிகளில் அதிக அளவில் குரங்குகள் நுழைந்து சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும் பயணிகளின் கையில் உள்ள தின்பண்டங்களை பிடுங்கிச் செல்கிறது.
இதனால் அப்பகுதிக்கு வரும் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இந்நிலையில், டால்பின் நோஸ் காட்சி முனையைப் பார்வையிட வந்த, வெளி மாநில சுற்றுலாப் பயணிகளின் கையில் இருந்த, பணப்பையை குரங்குகள் பிடுங்கி பள்ளத்தாக்கில் வீசியது. பின்னர் இது குறித்து உடனடியாக சுற்றுலாப் பயணிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் 500 அடி பள்ளத்தில் விழுந்த பணப்பையை கடும் சிரமத்திற்குப் பின், எடுத்து சுற்றுலாப் பயணிகளிடம் ஒப்படைத்தனர்.