கரோனா பெருந்தொற்று உலகத்தையே உலுக்கி வருகிறது. இதுவரை கரோனாவுக்கு மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை. தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து மேலும் பரவாமல் பார்த்துக் கொள்வதே தற்போதைய வழியாகவுள்ளது.
இந்தத் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமானது முகக்கவசம் அணிதல். ஆனால் இந்தியாவைப் பொருத்தமட்டில் மருத்துவர்களே அதிகம் முகக்கவசம் அணியும் பழக்கம் கொண்டவர்கள். சாமானியர்களுக்கு முகக்கவசம் பழக்கமில்லாத ஒன்று. தற்போதயை கால சூழ்நிலையில் பல்வேறு முகக்கவசங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் முதன் முதலாக வெட்டி வேரில் முகக்கவசம் செய்து அசத்தி வருகிறார் உதகையை சேர்ந்த ஐஸ்வர்யா. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிசியோதெரபி மருத்துவராக பணியாற்றி வரும் ஐஸ்வர்யா, கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஏதேனும் செய்ய நினைத்தார். இதற்காக வெட்டிவேரில் முகக்கவசம் தயாரித்து குறைந்த விலைக்கு விற்றுவருகிறார்.
வெட்டிவேரில் முகக்கவசம் தயாரிக்கும் பிசியோதெரப்பிஸ்ட்! ஒரு கிலோ வெட்டி வேர் ரூ.1000-க்கு பெற்று சாதாரண இரண்டு அடுக்கு துணி முகக்கவசத்தின் இடையில் வைத்து தைத்துவிடுகிறார், ஐஸ்வர்யா. பின்னர் இதை பாதுகாப்பான முறையில் விற்பனையும் செய்து வருகிறார். தொடக்கத்தில் வெட்டி வேரின் தன்மை அறியாதததால் இந்த முகக்கவசத்தை வாங்க யாரும் முன்வரவில்லை.
இது குறித்து பிசியோதெரபிஸ்ட் ஐஸ்வர்யா, “ வெட்டிவேர் முகக்கவசத்தை ஐந்து நாள்களுக்கு மேலும் பயன்படுத்தலாம். சாதாரண நீரில் துய்மைபடுத்தினால் போதும்.தற்போது இந்த முகக்கவசத்திற்கு வரவேற்பு பெருகியுள்ளது. இந்த முகக்கவசத்தால் எவ்வித நோய் தொற்றும் ஏற்பாடாத வண்ணம் தயாரிக்கிறோம். நீலகிரி மாவட்டம் மட்டுமல்லாமல், சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும் மற்றும் இந்தியா முழுவதும் இந்த வெட்டி வேர் முகக்கவசத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இதனால் ஆர்டரின் பெயரில் செய்து கொடுத்துவருகிறேன். ஒரு முகக்கவசம் தயாரிக்க 5கி வெட்டிவேரைப் பயன்படுத்துகிறேன். ஒரு முகக்கவசத்திற்கு 20 ரூபாய் முதல் 23 ரூபாய் வரை செலவு செய்வதால், மொத்தமாக வாங்குவோருக்கு 25 ரூபாயும், தனியாக வாங்கினால் 30 ரூபாயும் விலை வைத்துக் கொடுக்கிறேன். விற்பனை நோக்கத்தோடு இல்லாமல் நோய் தொற்றை தடுக்கும் விதமாக மட்டுமே இதைச் செய்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: வெட்டி வேரில் முகக்கவசம்... கவனம் ஈர்க்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்!