தஞ்சை பெருவுடையார் கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் (பிப். 05) குடமுழுக்கு நடைபெற்றது. இதில் ஏறத்தாழ நான்கு லட்சம் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற மண்டலாபிஷேகத்தில் பெருவுடையார், பெரியநாயகி உள்பட அனைத்து தெய்வத் திருமேனிகளுக்கும் பால், மூலிகை எண்ணெயில் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இந்த மண்டலாபிஷேகம் தொடர்ந்து 24 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
மண்டலாபிஷேகம் வழக்கமாக 48 நாட்களுக்கு நடைபெறும். ஆனால், மகா சிவராத்திரி விழா மார்ச் 22ஆம் தேதி நடைபெறவுள்ளதாலும், சித்திரை திருவிழா, காப்புக் கட்டும் விழா நடைபெற இருப்பதால் 24 நாள்களாக குறைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நந்திகேசுவரருக்கு பால், மூலிகை எண்ணெய் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், அங்கவஸ்திரம் சாத்தி, மாலை சூட்டி அலங்கரிக்கப்பட்ட பிறகு தீபாராதனை காட்டப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற மங்கள இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
இதையும் படிங்க: மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய குடமுழுக்கு: திரளான பக்தர்கள் பங்கேற்பு