டெல்டா பாசன விவசாயிகள் இந்தாண்டு வழக்கம்போல குறுவை, சம்பா சாகுபடி விவசாயம் மேற்கொள்ள ஏதுவாக மேட்டூரில் கடந்த 300 நாள்களுக்கும் மேலாக 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு இருப்பதைத் தொடர்ந்து 12ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்டா பகுதி மக்களின் விவசாய பாசனத்திற்காகவும், பொதுமக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையிலும் தண்ணீரை மேட்டூரிலிருந்து திறந்துவைத்தார்.
அந்த நீரானது கரூர், திருச்சி வழியாக கல்லணைக்கு நேற்று (ஜூன் 15) அதிகாலை வந்துசேர்ந்தது. அதைத் தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் என அனைத்து ஆறுகளிலும் உள்ள சட்ரஸ்கள் ஏற்றி இறக்கப்பட்டு சரியானபடி இயங்குகிறதா என்று ஆய்வுசெய்து கிரீஸ் போடப்பட்டு, வர்ணம் பூசப்பட்டுள்ளது.
மேலும் அணைகளுக்கும் வர்ணம் பூசப்பட்டு அங்குள்ள அகத்தியர் சிலை, மீன் பிடிக்கும் மீனவர் சிலை, நெற்கதிர் தூக்கிச் செல்லும் பெண் சிலை, கரிகாற்சோழன் சிலை, ராஜராஜன் சிலை என அனைத்து சிலைகளும் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவைப் பெற்றுள்ளன.