கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், பல மாதங்களாக பழுதுபட்ட மின் தூக்கியை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத வழக்கறிஞர்கள் சங்கத்தையும், நீதிமன்ற நிர்வாகத்தையும் கண்டித்து மாற்றுத் திறனாளி வழக்கறிஞர்கள் மணி செந்தில் மற்றும் திருசக்திவேல் முருகன் உள்பட பல வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாக வாயிலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் நேற்று (டிசம்பர் 15) ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து செய்தியாளர்கள் போராட்டத்தை காட்சிப்பதிவு செய்தும், செய்தியாகவும் சேகரித்தனர்.
இதைக்கண்ட வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் ராஜசேகர், செய்தியாளர்களை நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறுமாறு தெரிவித்துள்ளார். இதனால் செய்தியாளர்களுக்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மூன்று தளங்களில் பதினோறு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் நீதிபதிகள் பயன்பாட்டிற்கும், வழக்கறிஞர்கள் பயன்பாட்டிற்கும் தனித்தனியாக மின்தூக்கிகள் உள்ளன.
இதில் வழக்கறிஞர்கள் பயன்படுத்தும் மின் தூக்கி மட்டும் சில மாதங்களாகவே பழுதடைந்து இயங்காத நிலையில் இருந்துள்ளது. இதனால் மாற்றுத்திறனாளி வழக்கறிஞர்கள் மட்டுமின்றி, வழக்குகளுக்காக வரும் மூத்த பெரியவர்களும், நாள்தோறும் கடும் சிரமம் ஏற்படுகிறது. இதனை உடனடியாக பழுதுநீக்க வேண்டி பலமுறை மாற்றுதிறனாளி வழக்கறிஞர்கள் சங்கத்திற்கும், நீதிமன்ற நிர்வாகத்திற்கும் நேரடியாகவும், மனுக்கள் வாயிலாகவும் முறையிட்டும் பலன் இல்லாத நிலையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சண்முகப்ரியா, மின்தூக்கி பழுது நீக்க வேண்டியதன் அவசியம் குறித்து தஞ்சை மாவட்ட நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, 15 தினங்களில் அதாவது 2023 ஜனவரி முதல் தேதி மின்தூக்கி முழுமையாக பழுதுநீக்கி செயல்பாட்டில் இருக்கும் என உறுதியளித்தை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மாற்றுத்திறனாளி வழக்கறிஞர்களின் முற்றுகை போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டு முடிவிற்கு வந்தது
இதையும் படிங்க: யோகா விழிப்புணர்வுக்காக 3 ஆண்டு பயணம்.. தஞ்சை வந்த மைசூரு இளைஞர்!