உலகளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கியப் பண்டிகையான பக்ரீத், நாடு முழுவதும் ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்படவுள்ளது. இது ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக இஸ்லாமியர்கள் இந்த நாளைக் கொண்டாடுகின்றனர். இந்நாளில் அனைவரும் இறைச்சி உணவு சாப்பிட்டு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனக் கருதி இஸ்லாமியர்கள் ஏழை மக்களுக்கு இறைச்சி தானம் செய்வது (குர்பானி) வழக்கம்.
பக்ரீத் பண்டிகை: குர்பானி கொடுப்பதற்காக ஆடு வாங்க குவியும் இஸ்லாமியர்கள்!
தென்காசி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடையநல்லூர் தற்காலிக சந்தையில் இஸ்லாமியர்கள் குர்பானி கொடுப்பதற்காக ஆடு வாங்க கூட்டம் கூட்டமாகக் குவிந்தனர்.
ஆனால், தற்போது பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைகள் கரோனாவின் தாக்கத்தால் மூடப்பட்டுள்ளதால், ஒரு சில பகுதிகளில் மட்டும் மாலை நேரங்களில் தற்காலிக சந்தைகள் செயல்பட்டுவருகின்றன. அந்த வகையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அட்டை குளத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தையில் கரோனாவையும் பொருட்படுத்தாமல் இஸ்லாமியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர்.
இந்தச் சந்தைக்கு மதுரை, தேனி, விழுப்புரம், கோவில்பட்டி, சங்கரன்கோவில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பெருநகரங்களிலிருந்து வியாபாரிகள் ஆடுகளை மினி லாரிகள் மூலம் கொண்டு வந்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த அட்டை குளத்தில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரியவிட்டு ஆட்டுச்சந்தை களைகட்டியுள்ளது.