தென்காசி: புளியங்குடி பகுதியில் வேட்டை நாயை வைத்து வன விலங்குகளை வேட்டையாடிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேட்டை நாயை வைத்து விலங்குகளை வேட்டையாடிய 5 பேர் கைது!
வேட்டை நாயை வைத்து வன விலங்குகளை வேட்டையாடிய ஐந்து பேருக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புளியங்குடி வனப்பகுதியில் வேட்டை நாய்களை வைத்து காட்டுப் பன்றியை வேட்டையாடி, இரையாக்கி சாப்பிடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் புளியங்குடி வனச்சரக அலுவலர் ஸ்டாலின் தலைமையில், வனக் காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டியன், கருப்பசாமி, ராம்குமார், மணிகண்டன், குருசாமி ஆகிய ஐந்து பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து ஐந்து நபர்களுக்கும் தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.