தென்காசி:இலஞ்சி அருகே உள்ள கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்த வினித் - கிருத்திகா காதல் தம்பதியினரை பிரித்து, கிருத்திகா கடத்தப்பட்டதாக கூறப்படும் சூழலில், இந்தச் சம்பவம் குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கிருத்திகா தான் கடத்தப்படவில்லை எனவும், தான் அழைத்தன் பேரில் தான் தனது பெற்றோர்கள் தன்னை வந்து அழைத்துச் சென்றதாகவும் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வினித், கிருத்திகாவை மீட்டு தரக்கோரி ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனு கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்த சூழலில், வழக்குத் தொடர்பாக குற்றால காவல் நிலைய ஆய்வாளர் ஆஜராகி வழக்கின் தன்மை குறித்து எடுத்துக்கூறினார். அதனைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையை மார்ச் மாதத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில், கிருத்திகா நேற்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவரது வழக்கறிஞர்கள் மூலம் ஆஜர் படுத்தப்பட்டார்.
அப்பொழுது, அவரிடம் நீதிபதிகள் விசாரணை நடத்திய போது, முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளிக்கவே கிருத்திகா மன அழுத்தத்தில் இருப்பதாகக் கூறி அவரை 2 நாட்கள் காப்பகத்தில் வைத்து மனநல ஆலோசனை வழங்கி அதன் பின்னர், அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற வேண்டுமென நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.