சிவகங்கை : திருப்பாச்சேத்தியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஐயப்பன் கொடுத்த தகவலின் அடிப்படையில் மழவராயனேந்தலில் வடக்குவாசெல்லி உத்தம நாச்சியம்மன் கோவில் பகுதியில் சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா, செயலர் நரசிம்மன், மூத்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் ஆகியோர் ஆய்வு செய்தனர். அங்கு 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பைரவர் சிலை மற்றும் சூலக்கல் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் கா.காளிராசா கூறியதாவது: திருப்பாச்சேத்திக்கு வடகிழக்கு பகுதியில் வைகைக் கரையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மழவராயனேந்தல் வடக்கு வாசெல்லி உத்தம நாச்சியம்மன் கோவில் பகுதியில் உள்ள சிலை என்ன சிலை என்று தெரியாமல் வணங்கப்படுவதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் அச்சிலை பைரவர் சிலை என்றும் அது கி.பி.11 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றும் அடையாளம் காணப்பட்டு உள்ளது.
பைரவர் சிலையின் வடிவம்:சிவ மூர்த்தங்கள் 64இல் ஒன்றாகப் பைரவர் வடிவமும் உள்ளது. பொதுவாகப் பைரவர் என்றாலே நின்ற கோலத்திலும் சூலம், உடுக்கை, பாசக்கயிறு போன்றவற்றைக் கையில் கொண்டும் நிர்வாணக் கோலத்தில் நாய் வாகனத்தோடும் இருப்பது வழக்கம். ஆனால் இங்குக் காணப்பட்ட பைரவர் இரண்டு கைகள் மட்டுமே உடையதாகவும் ஒரு கை இடுப்பிலும், மற்றொரு கை அருள்பாலித்த வடிவிலும் கழுத்து மற்றும் இடையில் ஆபரணங்களைக் கொண்டும் முகம் மிகவும் தேய்ந்த நிலையிலும் காணப்பட்டது.