'அணைகள் பாதுகாப்பு மசோதாவில் மாற்றம்...!' - எடப்பாடி வலியுறுத்தல்
சேலம்: அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதா 2018இல் மாற்றம் செய்யக்கோரி தொடர்ந்து குரல் கொடுத்துவருவதாகவும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
cm
சேலத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த முதலமைச்சர் பழனிசாமி, எடப்பாடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதின் முக்கிய அம்சங்கள்:
- தமிழ்நாட்டின் நிதி ஆதாரத்தைப் பெருக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது, அணைகள் பாதுகாப்புச் சட்ட மசோதா 2018இல் மாற்றம் செய்யக்கோரி தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி எந்த மாநில அரசும் அணை கட்டவும் தடுப்பணை கட்டவும் கூடாது. குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய நான்கு மாநில அரசுகளும் இந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பின்பற்ற வேண்டும்.
- பக்தர்கள் பிரச்னை ஏதுமின்றி அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு செல்ல ஏற்பாடுகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஆலோசனை நடைபெற்றது. மேலும், அத்திவரதரை இடம் மாற்றுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.
- சேலம் இரும்பாலையைப் பொறுத்தவரை பொதுத்துறை நிறுவனமாகவே செயல்பட வேண்டும்.
- உள்ளாட்சித் தேர்தல் விஷயத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் வார்டுகள் வரையறை செய்யப்பட்டுவருகிறது. விரைவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும்.
- ஆற்றங்கரையோரம் கான்கிரீட் கரைகள் அமைத்து நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இதன்மூலம் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வீணாகாமல் விளைநிலங்களுக்குச் செல்லும்; அதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இவை பாதுகாப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் 20 விழுக்காடு அளவுக்கு நீர் மிச்சப்படுத்தப்படும்.