திருப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகுமார் இன்று சட்டப்பேரவையில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று அதிகாலை அவிநாசி அருகே சாலை விபத்து ஒன்று நடந்துள்ளது. இதுகுறித்து சபாநாயகர் என்னை தொலை பேசி மூலமாக தொடர்பு கொண்டு அவரின் வருத்தத்தை தெரிவித்தார். மேலும் அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அவிநாசி அருகே சேலம் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், சேலத்திலிருந்து எர்ணாகுளம் சென்ற கேரள அரசுப் பேருந்தின் மீது, எதிர்ப்புறமாக கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியின் முன் பக்க டயர் வெடித்து மோதியதில், கேரளாவை சோ்ந்த 20 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த 23 பேருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், விபத்தில் உயரிழந்தவர்களின் விவரங்களை உறவினர்களுக்கு தெரிவிக்கவும், உதவி மையம் ஒன்றை ஏற்படுத்த உள்ளோம் என தெரிவித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை அவரவர் சொந்த ஊருக்கு எடுத்து செல்வதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கும், காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவிடுகிறேன் என்றார்.