சேலம்: கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "கோடநாடு கொலை வழக்கு பற்றி கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்தே பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். யாரும் சொல்லிக் கொடுத்து நான் பேசவில்லை. அதிமுக பொதுச்செயலாளர்
எடப்பாடி பழனிசாமி, கொங்கணாபுரம் அதிமுக பிரமுகர் ஒருத்தரை வைத்து பேரம் பேசினார்.
கோடநாடு வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை காட்டிக்கொடுக்க வேண்டாம், எவ்வளவு பணம் வேண்டும் என்று அந்த நபர் கேட்டார். பணத்திற்கு ஆசைப்படுபவன் நான் இல்லை. கோடநாடு பங்களாவில் நடந்த உண்மை வெளிவர வேண்டும். இதை தடுக்க கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த முக்கியப்புள்ளி மூலம் பேரம் பேச வந்தார். பேரம் பேசவேண்டாம் என்று அனுப்பி வைத்துவிட்டேன்.
எனக்கும், என் மனைவிக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. நான் பேட்டி கொடுப்பதால் எனது மனைவிக்கும் என் குழந்தைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தால் அவ்வாறு கூறியுள்ளார். திருமணமான 23 ஆண்டுகளாக எந்த பிரச்னையும், கருத்து வேறுபாடும் கிடையாது. கடந்த 10 நாள்களுக்கு முன்பு எனது மனைவி குழந்தைகளுடன் அவரது தாயார் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
அதற்கு காரணம் குழந்தைகளுக்கு பள்ளி தேர்வு நடந்து வருகிறது, ஒரு குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை, அவரது தாய் வீட்டிற்கும் பள்ளிக்கும் தூரம் மிகவும் குறைவு. இதனால் தான் அவர் அங்கு சென்று இருக்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தூண்டுதல்பேரில், தாரமங்கலம் ஒன்றிய கோனகபாடி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மோகன் என்பவர் எனது மனைவியிடம் பேசி, புகார் கொடுக்க வைத்துள்ளார்.
சிபிசிஐடி விசாரணையில் நான் ஆஜராகாமல் இருக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக வரும் 14ஆம் தேதி சம்மன் வந்துள்ளது. ஆனால் நாளையே என்னை விசாரிக்க சம்மன் அனுப்பவேண்டும் என்று சிபிசிஐடி காவல் துறையினரிடம் கேட்டுக் கொள்கிறேன். என் உயிருக்கு ஆபத்து உள்ளது, நாள்கள் கடந்து போகபோக, வழக்கு நீர்த்து போய் வருகிறது.