தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 23, 2020, 9:50 PM IST

ETV Bharat / state

சேலத்தில் மேலும் 185 பேருக்கு கரோனா

சேலம் : மாவட்டத்தில் இன்று (அக்.23) ஒரே நாளில் 185 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

COVID 19
COVID 19

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் தற்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியது போல், சேலம் மாவட்டத்திலும் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு, கடந்த சில தினங்களாக குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மாவட்ட நிர்வாகத்தின் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், நாள்தோறும் 300 முதல் 400 வரை இருந்த கரோனா எண்ணிக்கை, தற்போது வெகுவாகக் குறைந்துள்ளது. கரோனா நோய்த் தொற்று அதிகம் காணப்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அப்பகுதிவாசிகள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 185 பேருக்கு மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் 85 பேர், எடப்பாடி 1, வீரபாண்டி 8, ஓமலூர் 9, சங்ககிரி 14, மேட்டூர் நகராட்சி 2, கொளத்தூர் 1, மேச்சேரி 1, நங்கவள்ளி 10, காடையம்பட்டி 3, தாரமங்கலம் 4, கொங்கணாபுரம் 5, ஆத்தூர் 5, ஆத்தூர் நகராட்சி 1, பனமரத்துப்பட்டி 1, பெத்தநாயக்கன்பாளையம் 2, ஏற்காடு 1, வாழப்பாடி 2, அயோத்தியாப்பட்டணம் 1 என மொத்தம் 163 பேரும், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 22 பேருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 27ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 402ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில், இதுவரை 23 ஆயிரத்து 755 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 1,870 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details