சேலம் அரசு மருத்துவமனையில், கடந்த மாதம் 25ஆம் தேதி மேட்டூரைச் சேர்ந்த மாதேஸ்வரன் (40) என்பவர் கரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டார். இவர், தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராகப் பணியாற்றி வருகிறார். ஆம்புலன்சில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற போது, கரோனா தொற்று இவருக்கு பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன்பு மாதேஸ்வரன் தனது அறையிலிருந்த பழம் வெட்டும் கத்தியை எடுத்து வைத்துக் கொண்டு உடனே என்னை வீட்டுக்கு அனுப்பி வைக்காவிட்டால், உங்களை கொன்றுவிடுவேன் என மருத்துவர்களை மிரட்டியுள்ளார். பின்னர், மருத்துவர்கள் மாதேஸ்வரனுக்கு அறிவுரை கூறி, அவர் வைத்திருந்த பழவெட்டும் கத்தியைப் பறித்துக் கொண்டனர்.
இதையடுத்து, மாதேஸ்வரனுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார். இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் மருத்துவனை நிர்வாகம் சார்பில், மாதேஸ்வரன் மீது கொலை மிரட்டல் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாதேஸ்வரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.