சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏற்காடு சட்டப்பேரவை உறுப்பினர் கு.சித்ரா கலந்துகொண்டார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆட்சியர் சி.அ.ராமன் பேசுகையில், "முதலமைச்சர் சிறப்புக் குறை தீர்ப்பு கூட்டம் ஆகஸ்ட்19ஆம் தேதி எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்டபட்ட நங்கவள்ளியில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 56 ஆயிரத்து 267 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 26 ஆயிரம் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்ற மனுக்கள் தகுதி இல்லாத காரணத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
பல்வேறு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கை மனுக்களுக்கு தீர்வுகாண சிறப்பான திட்டமாக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் அமைந்துள்ளது. விடுப்பட்ட மனுக்கள் மீண்டும் பெறப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத் துறைகளின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.