இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது தனுஷ்கோடி என்கிற தொழில் நகரம். இது ஆங்கிலேயர்கள் காலத்திலேயே மிகப்பெரிய வணிக தலமாக இருந்தது. இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே கடல் போக்குவரத்தில் தனுஷ்கோடி நகரம் பெரும் பங்காற்றியது.
1964ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனுஷ்கோடியில் ஏற்பட்ட பெரும் புயல் காரணமாக உருவாகிய ஆழிப்பேரலையில் தனுஷ்கோடி நகரமே சின்னாபின்னமானது. இதில், பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனால் தனுஷ்கோடி முதல் ராமேஸ்வரம் இடையிலான ரயில் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
நேற்றுடன் தனுஷ்கோடியை புயல் தாக்கி 55 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போதும் தனுஷ்கோடிக்கு அமைக்கப்பட்ட நெடுஞ்சாலையின் வழியே செல்லும்போது இருமருங்கிலும் புயலினால் சிதைந்த கட்டங்கள் நமக்கு எடுத்துச் சொல்லும்.
குறிப்பாக பழைய மாதா ஆலயம், ரயில் நிலையம், தண்டவாளங்கள் புயலினால் அழிந்த கட்டடங்கள் புயலின் கோரத்தை நமக்கு எடுத்துக் கூறும். கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய அரசு முகுந்தராயர் சத்திரம் முதல் அரிச்சல்முனை வரையிலான பகுதியில் சாலை அமைத்தது.