ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதில் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, ரேஸ் வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த முறையினால் கடல்வளம் அழிவதுடன் பாரம்பரிய முறையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்தால் இலங்கை கடற்படையினர் தாக்குதல், சிறைபிடிப்பு சம்பவங்கள் அதிகரிப்பதாலும் மீன்வளத்துறை அலுவலர்கள் கடல் வளத்தை அழிக்கும் இரட்டைமடி வலை, சுருக்கு வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு மீனவர் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ராமேஸ்வரம் மீனவளத்துறை அலுவலரிடம் புகார் அளித்தனர்.