டெல்லி தப்லீக் ஜமாஅத் மாநாட்டிற்குச் சென்று வந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த இரண்டு முதியவர்களுக்கு ஏற்கனவே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதன்பின் கீழக்கரையைச் சேர்ந்த 71 வயதுடைய தொழிலதிபர் சென்னையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது உடல் கடந்த 3ஆம் தேதி கீழக்கரை கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
அதனையடுத்து இறந்தவரின் குடும்பத்தினர் 21 பேர் மற்றும் பரமக்குடியில் கரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 10 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
முதல்கட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. ஆனால், இரண்டாம் கட்ட பரிசோதனையில் இறந்த கீழக்கரை தொழிலதிபரின் மனைவி, மகன், பரமக்குடியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஆகிய மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.