ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 800க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அதில் தங்கச்சிமடம் தனிகிளாஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஏழு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது வலையை கடலில் வீசும்போது படகின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த தங்கச்சிமடம் ராஜா நகரைச் சேர்ந்த அந்தோணி லிவார்தன் என்பவரின் மகன் கார்சன் என்பவர் படகிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து சக மீனவர் கடலில் அருகில் இருந்த மீனவர்களுடன் இணைந்து இரவு 10 மணி வரை தேடுதலில் ஈடுபட்டும் மீனவர் கிடைக்காததால் மற்றவர்கள் கரை திரும்பினர்.