ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் சில ஆண்டுகளுக்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக முதியவர் ஒருவர் விடுதியில் தங்கியிருந்தார். அவரிடம் இலங்கை, அமெரிக்க நாட்டின் பணம் புழக்கத்தில் இருந்தது. இதையடுத்து, காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த முதியவர் பெயர் முகமது யூனுஸ் என்பதும். அவர் பாகிஸ்தானிலுள்ள கராச்சி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவர் கடவுச் சீட்டு ஏதுமின்றி கள்ளத் தனமாக இலங்கை செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
அதனையடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த அந்த முதியவரை கைது செய்த காவல் துறையினர், சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சென்னையிலுள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில் அவர் விசாரணைக்காக சென்னையிலிருந்து ராமநாதபுரம் 2ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நேற்று அவர் மீதான வழக்கின் தீர்ப்பு புழலில் இருந்தபடியே காணொலிக் காட்சி வாயிலாக வழங்கப்பட்டது. சிறையிலுள்ள அவரும் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.