தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 12, 2019, 9:36 PM IST

ETV Bharat / state

மாதிரி தேர்தல் நடத்திய கிராம மக்கள் - தடுத்து நிறுத்திய காவல் துறை!

ராமநாதபுரம்:  ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளருக்காக வாக்குச் சீட்டு அடித்து மாதிரி தேர்தல் நடத்திய கிராம மக்களை வருவாய் மற்றும் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

local-body-election-violates
local-body-election-violates

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது களரி ஊராட்சி. இவ்வூராட்சியில் களரி, கீழச்சீத்தை, ஆனைகுடி, சுமைதாங்கி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் மொத்தமாக 1,443 வாக்காளர்கள் உள்ளனர். இதில் அதிகபட்சமாக சுமைதாங்கியில் 451 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் கடந்த தேர்தல்களில் களரி, கீழச்சீத்தை கிராமங்களைச் சேர்ந்தவர்களே ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வாகியுள்ளனர்.

ஆனால் அதிக வாக்காளர்களைக் கொண்ட சுமைதாங்கி கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவராக யாரும் வர முடியவில்லை என அக்கிராம மக்கள் எண்ணியுள்ளனர்.

இந்நிலையில், வரும் தேர்தலில் சுமைதாங்கியைச் சேர்ந்த ஒருவரை நிறுத்தி வெற்றி பெறலாம் என அக்கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். அப்போது நான்கு பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்ததால், அவர்களில் ஒருவரை ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளருக்காக மாதிரி தேர்தல் நடத்தி தேர்வு செய்ய முடிவு செய்தனர். அதற்காக நான்கு பேரின் பெயர், அவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கி, ராமநாதபுரத்தில் உள்ள ஒரு அச்சகத்தில் வாக்குச் சீட்டு அடித்தனர்.

மாதிரி தேர்தல் நடத்திய கிராம மக்கள்

இதனையடுத்து இன்று காலை 7.30 மணியளவில் அங்குள்ள சமுதாயக்கூடத்தில் தேர்தல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீழக்கரை வட்டாட்சியர் பி.வீரராஜ் தலைமையில், திருஉத்தரகோசமங்கை காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று நடந்த மாதிரி தேர்தலை தடுத்து நிறுத்தினர்.

களரி கிராம நிர்வாக அலுவலர் சித்ரா தேவி புகாரின்படி, திருஉத்தரகோசமங்கை காவல் துறையினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக கூடி, ஒருவரை தேர்வு செய்ய வாக்குச்சீட்டு அச்சடித்து தேர்தல் நடத்தியதாக எட்டு பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:

சாலை, சாக்கடை வசதி இல்லை- உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க பொதுமக்கள் முடிவு!

ABOUT THE AUTHOR

...view details