தமிழ்நாட்டிற்குள் ஆறு பயங்கரவாதிகள் இலங்கை வழியாக ஊடுருவி, கோவைக்குச் சென்று சதிச் செயலில் ஈடுபட இருப்பதாக மத்திய உளவுத்துறை அறிக்கை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. முக்கிய ஆலயங்கள், தொடர்வண்டி நிலையங்கள், விமான நிலையங்களில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், கடலோர மாவட்டங்களிலும் கப்பல் படை, கடலோரக் காவல் படை ரோந்து பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ராமநாதபுர மாவட்டம் தனுஷ்கோடி அடுத்துள்ள அரிச்சல்முனையிலிருந்து கடல் மார்க்கமாக 14 கிலோமீட்டரில் இலங்கையை அடைந்து விடலாம். கடந்த 2017ஆம் ஆண்டு எம்ஆர் சத்திரம் முதல் அரிச்சல்முனை வரையிலான சாலை, 50 கோடி ரூபாய் மதிப்பில் செப்பனிடப்பட்டு, பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.