ராமநாதபுரம்: பரமக்குடி அருகே உரப்புளி கிராமத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு கொடி ஊன்றிய திமுக தொண்டர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கிராம சபைக் கூட்டப் பணி - திமுக தொண்டர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள உரப்புளி கிராமத்தில் பரமக்குடி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கிராமப்புறங்களில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள உரப்புளி கிராமத்தில் பரமக்குடி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் இன்று (ஜனவரி 6) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உரப்புளி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ், திமுக கொடி ஊன்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மேலே சென்று கொண்டிருந்த உயர் மின்னழுத்த கம்பியில் அவர் கையில் வைத்திருந்த கொடிக்கம்பம் உரசியது, இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பரமக்குடி தாலுகா காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஷ் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.