புதுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தோப்புநாயகம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார் (52). இவர் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி, புதுக்கோட்டையில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் தனது உறவினர் இல்லத் திருமண நிகழ்விற்காக மனைவியுடன் சென்றுள்ளார். அப்போது, உறவினர் வீட்டிற்கு மொய் செய்வதற்காக கீழராஜ வீதியில் உள்ள எஸ்.பி.ஐ ஏ.டி.எம்-மில் (SBI ATM) எவ்வளவு தொகை உள்ளது என அறிந்துள்ளார்.
அதில், ஏற்கனவே நெல் விற்பனை செய்த 92 ஆயிரம் ரூபாய் பணம் வங்கி இருப்பு இருந்துள்ளது. அதைத் தொடர்ந்து அவர் பணத்தை எடுக்க முயன்றபோது, அருகில் நின்ற மூன்று மர்ம நபர்கள் அந்த ஏ.டி.எம் எந்திரத்தில் பணம் இல்லை எனக் கூறி, அடுத்த இயந்திரத்தில் பணம் எடுக்குமாறு சிவக்குமாரிடம் தெரிவித்துள்ளனர்.
அப்போது அவர் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்திய நிலையில், அவரின் கவனத்தை திசைத் திருப்பி பாஸ்வேர்டு எண்ணை அறிந்து கொண்ட அந்த மர்ம நபர்கள், அவரை நூதன முறையில் ஏமாற்றி இங்கு பணம் இல்லை எனக் கூறி, வேறு ஒரு ஏடிஎம்மில் பணம் எடுக்குமாறு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட சிவக்குமார், மற்றொரு ஏடிஎம்மில் தனது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றபோது, பணம் வராததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தனது சொந்த ஊருக்குத் திரும்பிய சிவக்குமாருக்கு, செல்போனில் பணம் எடுக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மறுநாள் (ஆகஸ்ட் 21) திருவோணம் எஸ்.பி.ஐ வங்கிக்குச் சென்று, தான் பணம் எடுக்காமல் பணம் எடுத்ததாக செய்தி வந்துள்ளதாகப் புகார் அளித்துள்ளார்.