புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட பாஜக கிழக்கு மாவட்ட தலைவராக இருப்பவர், செல்வம் அழகப்பன். இவர் நச்சாந்துபட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டியில் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை தமது பெயருக்கு முறைகேடாக மாற்றிக் கொண்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும் அந்த இடத்தில் உள்ள சமுதாய கிணற்றை மூடிவிட்டு அங்கு சொகுசு விடுதி கட்டியதாகவும், அறக்கட்டளைக்கு சொந்தமான இடமாக கூறப்படும் பகுதியில் வசிப்பவர்களை மிரட்டி ரூ.15 லட்சம் கேட்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக 10க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
புகாரை பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக மனுதாரர்களிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இக்குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ள பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். சட்டத்துறை அமைச்சரின் தொகுதிக்கு உட்பட்ட வி.லட்சுமிபுரத்தில் செயல்படும் குவாரிகளுக்கு எதிராக குரல் கொடுத்ததாகவும், அதற்காகவே தன் மீது சிலர் அவதூறு பரப்புவதாகவும் கூறியுள்ளார். இதன் பின்னணியில் திமுகவினர் இருப்பதாகவும் செல்வம் அழகப்பன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 30-11-1970ல் என்னுடைய பாட்டி அடைக்கம்மை ஆச்சி - அய்யா முத்துராமன் ஆகியோர் பெயரில் சம்பந்தப்பட்ட நிலம் பதிவாகியுள்ளது. ஆனால் 28-02-1971ல் பிறந்த நான், அந்த சொத்தை எவ்வாறு அபகரிக்க முடியும்? என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. மேலும் எனது பாட்டி பெயரில் உள்ள சொத்துக்களை கடந்த 22-01-2022 அன்று 52 ஆண்டுகளுக்குப் பிறகு என் பெயரில் மாற்றியுள்ளேன். சுமார் 52 ஆண்டுகளாக இந்த சொத்து வேறு யார் பெயரிலும் இல்லை. அவ்வாறு யாருக்கும் உரிமை இல்லாத பட்சத்தில், ஒரு சிலர் கட்டடம் கட்டி வசித்து வருகின்றனர்.
ஆனால், என் மீது புகார் அளித்தவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தை, முத்துக்கருப்பன் என்பவர் 1994ல் அவர்களுக்கு பதிவிடப்படாத பத்திரத்தை கொடுத்ததாக கூறுகின்றனர். போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்புக்கு அவர்கள் முயற்சிக்கின்றனர். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளரிடம் நான் புகார் அளித்துள்ளேன்" என்றார்.