நாகை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சசிகலா அதிரடி காட்டுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தான் அரசியலிலிருந்தே விலகுவதாக அறிக்கை விட்டு அந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் சுக்கு நூறாக உடைத்து விட்டார் சசிகலா.
அண்மைக் காலமாகவே கோயில் கோயிலாகச் சென்று வழிபட்டு வரும் அவர், நேற்று (மார்ச்.27) நாகூர் நாகநாத சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார். ஆலயத்திற்கு சொகுசு காரில் வந்த அவரிடம் அமமுகவின் நாகை மாவட்டச் செயலாளரும், நாகை சட்டப்பேரவைத் தொகுதியின் வேட்பாளருமான மஞ்சுளா சந்திரமோகன் காலில் விழுந்து வரவேற்று ஆசி பெற்றார்.
நாகூர் நாகநாத சுவாமி ஆலயத்தில் சசிகலா சுவாமி தரிசனம் தொடர்ந்து அவர், ராகு சன்னதியில் ராகு தோஷம் (நாக தோசம்) நீங்க சிறப்பு யாகங்கள் நடத்தி விட்டு நாகநாத சுவாமி, திருநாகவல்லி அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டார்.
பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேண்டுதல் காரணமாகவே இங்கு வந்ததாகவும் எல்லோரும் நல்லா இருக்கணும் என்ற நல்ல எண்ணத்துடன் வழிபாடு நடத்தியதாகவும் தெரிவித்தார். ”சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?” என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கவனத்தில் கொள்ளாமல் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.