நாகை மாவட்டம் ஆரிய நாட்டுத் தெருவில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ தாய் மூகாம்பிகை கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மக பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டும் கணபதி ஹோமத்துடன் தொடங்கிய திருவிழாவானது தொடர்ச்சியாகப் பத்து நாள்கள் நடைபெறவுள்ளன.
இந்நிகழ்ச்சியின் முதல் நாளில் அம்மனுக்குப் பூச்சொரிதல் திருமுழுக்கு நடைபெறும். இதில் பங்கேற்க, நாகப்பட்டினம் துறைமுகம் கடற்கரையில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலிலிருந்து புறப்பட்ட பேரணியில் கலந்துகொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பூ தட்டு ஏந்தியவாறு ஊர்வலமாக வந்தனர்.