மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக, அக்கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாநிலத் துணைத் தலைவர் கி. காசிராமன் போட்டியிடுகிறார். உழவரான இவர் தான் வசிக்கும் திருவெண்காடு, சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் 25-க்கும் மேற்பட்ட கிணறுகளைத் தூர்வாரியும், குடிநீரைச் சுத்திகரித்தும் பொதுமக்களுக்கு வழங்கி சேவை செய்துவருகிறார்.
மேலும் தனது வீட்டில் காளை மாடு, குதிரைகளைப் பராமரித்துவருகிறார். கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுவதால் புதுமையான முறையில் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டிவரும் காசிராமன், கடந்த வாரம் மண்வளத்தைக் காப்போம் என்று கூறி கருவேலமரங்களை அகற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்குச் சேகரித்தார்.