சாலையோரத்தில் கால்நடைகள் இறந்துகிடந்தாலே எளிமையாக கடந்து செல்வோர் வாழும் இவ்வுலகில் ஆதரவற்று உயிரிழந்து கிடக்கும் மனித சடலங்களை தனது சொந்தச் செலவில் அடக்கம் செய்து வருகிறார் நாகையைச் சேர்ந்த தொண்டுள்ளம் படைத்த ஒருவர். ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்வதற்கு மருத்துவமனை, காவல் துறையினர், அரசு அலுவலர்கள் என அனைவரின் பங்களிப்பும் தேவை. இவர்களின் பார்வைக்கு அப்பால் செய்வது சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு இருக்கும்பட்சத்தில் நாகையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற நபர் ஆதரவற்ற சடலங்களை தனது சொந்த செலவில் அடக்கம் செய்துவருகிறார்.
சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் ஆதரவற்று கிடந்த சடலத்தை யாரும் கண்டுகொள்ளாமல் சென்றதைப் பார்த்து மனம் வெதும்பிய ராஜேந்திரன், ஆதரவற்ற சடலங்களை தனது சொந்த செலவில் அடக்கம் செய்ய முடிவெடுத்தார். அதன்படி இதுவரை அவர் 800க்கும் மேற்பட்ட பூத உடல்களை சாதி, மத பேதமின்றி தனது சொந்த செலவில் சடங்கு சம்பிரதாயங்களுடன் அடக்கம் செய்து சத்தம் இல்லாமல் சேவையாற்றி வருகிறார்.
குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட குழந்தைகள், ஆதரவற்று வீட்டைவிட்டு வெளியேறி விரக்தியில் உயிரிழந்தவர்கள், நோய் வாய்பட்டு மருத்துவமனை, பொது இடங்களில் உயிரிழந்த முதியவர்கள், இறுதி சடங்கு செய்ய வழியில்லாதச் சடலங்களை முறைப்படி இறுதிச் சடங்குகளை செய்து அடக்கம் செய்கிறார் இந்த சமூக சேவகர்.