நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் பனங்குடி கிராமத்தில் பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகிறது. 240 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வந்த சிபிசிஎல் நிறுவனம் கடந்த சில நாள்களுக்கு முன்பு எண்ணெய் சுத்திகரிப்பை நிறுத்தியது.
இந்நிலையில், சிபிசிஎல் நிறுவனம் 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 658 ஏக்கரில் விரிவாக்க பணி மேற்கொண்டு மீண்டும் ஆலையை இயக்க திட்டமிட்டுள்ளது. நிறுவன விரிவாக்கத்திற்கு நிலம் கொடுக்க பனங்குடி, முட்டம், நரிமணம், கோபுராஜபுரம், உத்தமசோழபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கூடுதல் விலைக்கு நிலத்தை எடுக்கவேண்டும், நில உரிமையாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு வாரங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் சிபிசிஎல் நிறுவன விரிவாக்கத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த விவசாயிகள் எல்.பி.ஜி மற்றும் என்.எல்.ஜி உள்ளிட்ட வாயுக்களின் கழிவுகள் வெளியேறினால் துர்நாற்றம் வீசுவதுடன், சுவாச பிரச்சனை உள்ளிட்ட நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள விவசாயிகள் சி.பி.சி.எல் நிறுவன விரிவாக்கத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:கருணைக்கொலை செய்யக்கோரி சிபிசிஎல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!