நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அமைந்துள்ளது இந்தியாவின் பழமையான சைவ ஆதீனங்களின் ஒன்றான தருமபுரம் ஆதீனம். ஆதீனத்தின் 26ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வயது முதிர்ந்து மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனின்றி அவர் இன்று பிற்பகல் முக்தியடைந்தார். அவரது திருமேனி மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஆதீன மடத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
ஆதீனத்தில் குரு மகா சந்நிதானம் உடலை அவரது ஞான பீடத்தில் அமர வைத்து, ஆதின மரபின்படி பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களின் தரிசனத்திற்காக பொது மண்டபத்தில் வைக்கப்பட்டது.
ஆதீனத்திற்குக் கொண்டுவரப்பட்ட தருமபுரம் ஆதீன மடாதிபதியின் உடல் ஏராளமான பொதுமக்கள் கண்ணீருடன் திருமேனி முன் விழுந்து வணங்கி அஞ்சலி செலுத்தினர். நாளை மாலை அவரது உடல் ஆதினத்திலுள்ள ஆதீன குரு மூர்த்த நந்தவனத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தருமபுர ஆதீனத்தின் இளைய மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முக்தி அடைந்த மடாதிபதியின் திருமேனியை தரிசிப்பதற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆதினங்களில் இருந்து மடாதிபதிகள், கட்டளை தம்பிரான்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த உள்ளனர்.
இதையும் படிங்க :தருமபுரம் ஆதீனம் மறைவு; பக்தர்கள் சோகம்!