காவல் ஆய்வாளர் உள்பட 7 காவலர்களுக்கு கரோனா: மயிலாடுதுறை காவல் நிலையம் மூடல்
நாகப்பட்டினம்: மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் உட்பட 7 காவலர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கடந்த ஒரு வாரத்திற்குள் அடுத்தடுத்து காவல் ஆய்வாளர் உள்பட 7 காவலர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காவல் நிலையத்தில் புகாரளிக்க வருபவர்களுக்கும், தற்போது பணியில் இருக்கும் காவலர்களுக்கும் தொற்று பரவாமல் இருக்க காவல் நிலையம் பூட்டப்பட்டது.
முன்னதாக, நகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி கொண்டு காவல் நிலையத்தைச் சுத்தப்படுத்தினர். மேலும் அருகிலுள்ள காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகமும் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டது. அதன்பிறகு காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.