டெல்லி சென்று திரும்பிய நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அவர் சீர்காழி சபாநாயகர் தெருவில் அவரது மாமியார் வீட்டில் 15 நாட்கள் தங்கி சென்றுள்ளார். இதனால், தாடாளன் மேலவீதி, கீழவீதி, சபாநாயகர் தெரு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வீதிகளை நகராட்சி மற்றும் காவல் துறையினர் தனிமைப்படுத்தி சீல் வைத்தனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அலுவலர்கள் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாகப்பட்டினம் மாவட்டத்தில் 32 பேரை தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்ததில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் சீர்காழி பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கிச் சென்றுள்ளார். இதனால், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் யார் யார் என்று விசாரணை செய்து வருகிறோம். அவரது உறவினர் வீட்டைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதியும் தனைமைப்படுத்தப்பட்டு 28 நாட்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.