காவிரிப்படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு உள்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை அடுத்த வடதெரு கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு சர்வதேச ஏலம் விடப்படுவதற்கு, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் கூறுகையில், ’’காவிரிப்படுகையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த சர்வதேச ஏலத்துக்கு ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் அழைப்பு விடுத்திருக்கிறது.
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு ஏலம் விடப்படுவதற்கு கண்டனம் கடந்த (ஜூன் 10)ஆம் தேதி இதற்கான அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஏலம் தொடர்பாக இணைய வழியாக கருத்து பரிமாற்றம் வருகிற (ஜூன் 30)ஆம் தேதி நடைப்பெற உள்ளது. காவிரிப்படுகையை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டுவதென இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.
உடனடியாக, இது கைவிடப்பட வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. கண்டுபிடிக்கப்பட்ட சிறு எண்ணெய் வயல்கள் என்ற பெயரில் புதுக்கோட்டையில் நெடுவாசல் அருகில் வட தெரு என்கிற கிராமத்தில் 463 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் 19 எண்ணெய் கிணறுகளை அமைக்க திட்டமிட்டுள்ளன.
அதற்கான, ஏலம் தற்போது நடைப்பெற உள்ளது. ஓஎன்ஜிசியும், ஆயில் இந்தியா லிமிட்டெட் நிறுவனமும் நிலங்களை ஆய்வு செய்துள்ளது. அவர்களிடமிருந்து பறித்து, பன்னாட்டு முதலாளிகளிடம் இந்திய அரசு தற்போது ஒப்படைக்கிறது. இந்தியா முழுவதும் 75 எண்ணெய் வயல்களிலிலும் நடைமுறைப்படுத்த இருக்கிறார்கள்.
இந்த திட்டத்தில் நீரியல் விரிசல் என்ற அபாயகரமான ரசாயத்தை பயன்படுத்தி செயற்கை பூகம்பத்தை உருவாக்கி எடுக்கக்கூடிய மரபு சாரா எண்ணெய் எரிவாயு எடுப்பு நடத்தப்பட்ட உள்ளது என அவர்களே கூறியிருக்கிறார்கள்.
எனவே, வடதெரு கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களும் இதனால், அழிவுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது. கடந்த பிப்ரவரியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றியது. ஆளுநரும் இதற்கு கையெழுத்திட்டுள்ளார்.
நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஐந்து வட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல வரம்புக்குள் வருகிறது. இந்த பகுதியிலேயே அடாவடியாக இந்த ஏலத்தை அரசு நடத்த முயற்சிக்கிறது. இதனை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும். டெல்டா மாவட்டம் முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்’’ எனக் கூறினார்.
இதையும் படிங்க: கரோனா இறப்பை மறைக்க வேண்டிய தேவை அரசுக்கு இல்லை'