நாகப்பட்டினம்:ஹைட்ரோகார்பன் திட்டங்களால் ஏற்பட்ட, இனி ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசு உயர்மட்ட தொழில்நுட்ப வல்லுனர் குழுவை மறுகட்டமைப்பு செய்துள்ளது. அதற்கான நோக்கங்களையும், பொறுப்புகளையும் வரையறுத்துள்ளது. இதற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
ஹைட்ரோகார்பன் கிணறுகள்
இதுகுறித்து கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் கூறியதாவது, "தமிழ்நாடு அரசு விவசாயத்தையும் மண்ணையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோகார்பன் கிணறுகள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் 5 கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி அனுமதி கோரிய போது, அதை தமிழ்நாடு அரசு நிராகரித்தது.
எரிவாயுக் கிணறுகள்
மேலும், தமிழ்நாடு முழுவதும் எண்ணெய் - எரிவாயுக் கிணறுகள் அமைக்க அனுமதி இல்லை என்று அறிவித்தது. தொடர்ந்து வேளாண்மையை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக வேளாண்மை நிதிநிலை அறிக்கை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது ஹைட்ரோகார்பன் விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய ஏழு பேர் கொண்ட உயர்மட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.