மயிலாடுதுறை:தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்புத் திட்டத்தில் ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் தூர்வாரிய பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் நேற்று(மே 30) முதல் ஆய்வு செய்து வருகிறார். இன்று(மே 31) நாகையில் ஆய்வு செய்த முதலமைச்சர் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி நேரடி நெல் விதைப்பு முறை, இயந்திர நடவு முறை, மற்றும் தூர்வாரப்பட்ட வாய்க்கால்களை ஆய்வு செய்தார்.
தரங்கம்பாடி தாலுகா அனந்தமங்கலத்தில் நேரடி நெல் விதைப்பு முறையான ட்ரம்சீடர் முறையில் விதைப்பு செய்யும் பணிகளைப் பார்வையிட்டார். தொடர்ந்து திருக்கடையூரில் முதலமைச்சரின் சிறப்புத்திட்டத்தில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார். அங்கு திரண்டிருந்த விவசாயிகள், பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். பின்னர் நல்லாடை கிராமத்தில் இயந்திர நடவு மூலம் நாற்றுகள் நடவு செய்யும் பணிகளை நேரடியாகப் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு விவசாயிகள் பொதுமக்களைச் சந்தித்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் 92ஆயிரத்து 500 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பம்புசெட் மூலம் 24 ஆயிரத்து 500 ஏக்கர் சாகுபடிப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் 47 ஆயிரம் ஏக்கர் நடவுக்கு தயாராக உள்ளதாகவும், மாவட்டத்தில் 3 ஆயிரத்து 500 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு செய்ய திட்டமிடப்பட்டு 356 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு செய்து முடிக்கப்பட்டுள்ளதாகவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் சிறப்புத்திட்டத்தின் கீழ் 850 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆறுகள் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.