கடலூர் மாவட்டம், புவனகிரியைச் சேர்ந்தவர் சாந்தமூர்த்தி (43). இவரது மகன் வெற்றிச்செல்வன்(11) இவர் அதேபகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கரோனா பொதுமுடக்கத்தால் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டு கடந்த 45 நாள்களுக்கு மேலாக வீட்டிலேயே இருக்கும் வெற்றிச்செல்வன், தனது தாத்தா பாட்டியை காண வேண்டும் என தந்தையிடம் கூறி வந்ததாகத் தெரிகிறது.
இதனிடையே, பேருந்து போக்குவரத்து ஏதும் இல்லாததால் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என தந்தை கூறியுள்ளார். இந்நிலையில் வெற்றிச்செல்வன் தனது தந்தையின் இருசக்கர வாகனத்தை அவருக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டு தாத்தா வீடான சேத்தியா தோப்புக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
அப்போது, வழி தெரியாமல் சிதம்பரத்தை கடந்து நாகை மாவட்டம் சீர்காழி புறவழிச்சாலை எருக்கூர் என்ற இடத்தில் வந்தபோது, அவரது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோல் தீர்ந்துவிட்டது. இதனால் வெற்றிச்செல்வன் இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டே அழுதபடி வந்துள்ளான். இதைக் கண்ட சீர்காழி காவல் உதவி ஆய்வாளர் ராஜா சிறுவனிடம் விசாரித்தபோது நடந்தவற்றை கூறியுள்ளான்.
பின்னர் அந்தச் சிறுவனை சீர்காழி காவல் நிலையம் அழைத்து வந்து அவனது பெற்றோர் முகவரியை கேட்டு அவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். அதனையடுத்து அவனது தந்தை சாந்தமூர்த்தி, தாத்தா உறவினர் சிலர் காவல் நிலையம் வந்தனர். காவல் துறையினர் சிறுவனுக்கு அறிவுறை கூறி குளிர்பானம், பிஸ்கெட், பழங்கள் உள்ளிட்டவைகளை வழங்கி பெற்றோருடன் அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க:ஓமலூர் அருகே வெல்லம் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து