நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை கோட்டத்தில் ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி உள்ள மாணவர்களுக்கு முதியவர் ஒருவர், தான் கற்று தேர்ந்த பாரம்பரியமிக்க தற்காப்பு கலைகளை வளர்க்கும் விதமாக தள்ளாத வயதிலும் இலவசமாக கற்றுத் தந்து தன்னம்பிக்கையுடன் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி வருவது கிராம மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் தமிழர்களின் பண்பாடு பரந்து விரிய முக்கிய காரணமாய் திகழ கலைகளும் ஒன்று. ஒயிலாட்டம், மயிலாட்டம், தற்காப்பு கலை, தீப்பந்தம், சிலம்பாட்டம், தேவராட்டம் தமிழ்ச் சமூகத்தின் ஆணிவேராக உள்ளது. தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றி பிணைந்து கிடக்கிறது. வழிபாட்டிற்கு வழிகாட்டியாக இருக்கும் கலைகள் இன்று மெல்ல மெல்ல அழியத் தொடங்கிவிட்டன.
இன்றைய தலைமுறையினர் இப்படியொரு கலை இருப்பதே தெரியாத அளவிற்கு நகர வாழ்க்கையை நோக்கிச் சென்றுவிட்டனர். செல்போன் மீதான மோகத்தில் கலையை வளர்க்கும் ஆர்வம் குறைந்துவிட்டது. கணினியிலும், சமூகவலைதளங்களிலும் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் நேரத்தை செலவழிக்கின்றனர். இதனால், மனதளவில் பாதிப்புகளை சந்திக்கும் சூழலும் ஏற்படுகிறது.
ஆனால், தற்காப்பு கலை நாம் அனைவரும் கற்க வேண்டிய ஒன்று. எந்தவொரு சூழலிலும் தனிமனித பாதுகாப்பு அவசியம் தேவைப்படுகிறது. தன்னை தாக்க வருவோரிடமிருந்து தற்காத்து கொள்ள அவசியம் பயிற்சி தேவை. இதுபோன்ற கலைகள் செல்போனிலும், கணினியிலும் கற்க முடியாது. உடல் உழைப்பு மட்டுமல்ல மனதை ஒருநிலைப்படுத்தும் கலையாகவும் இருக்கிறது. அழிந்து வரும் இந்தக் கலைக்கு புத்துயிர் அளித்து கணபதி என்ற குஸ்தி வாத்தியார், இந்த தள்ளாத வயதிலும் இளைஞர்களை போல் துடிப்புடன் மாணவர்களுக்கு பயிற்சிளித்து வருகிறார்.
நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கருவாழக்கரை மேலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி (81). தனது 12ஆவது வயதில் சிலம்பம் கற்க தொடங்கியதிலிருந்து தற்காப்பு கலையின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால், ஐந்தாம் வகுப்போடு பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு முழுநேரமும் தற்காப்புக் கலைகளை கற்று வந்தார். குஸ்தி, மருவு, சுருள், அருவா சுற்றுதல், அருவாவெட்டிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுதல், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய பிரிவில் உள்ள கலைகளை பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கற்றுத் தேர்ந்தார்.
தனது 22ஆவது வயதிலேயே மாணவர்களுக்கு தற்காப்பு கலையை பயிற்றுவிக்கும் குருவாக தேர்ந்து கணபதி வாத்தியார் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டார். தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக தற்காப்பு கலையை கட்டணம் பெறாமல் இலவசமாக கற்றுத் தருவதையே முழுநேர தொழிலாக செய்து வருவது பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது.