தமிழ்நாட்டில் 31ஆவது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மதுரை
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பேரையூரில் பேரையூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். ஊர்வலத்தில் மேளதாளங்கள் முழங்க யானையுடன் வந்து பொதுமக்களுக்கு சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு குறித்தும் அதனை பாதுகாக்க வலியுறுத்தியும் துண்டு பிரசுரம் வழங்கினர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அரசு போக்குவரத்துக் கழக தலைமை கோட்ட அலுவலகத்திலிருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை வருவாய் கோட்டாட்சியர் வீராசாமி, கோட்ட மேலாண்மை இயக்குநர் பொன்முடி ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். இதில் சாலை பாதுகாப்பு, உயிருக்கு பாதுகாப்பு எனும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஓட்டுநர்கள், நடத்துநர்கள் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆகியோர் கையில் ஏந்தியபடி பேரணியாக சென்று விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.