நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனையடுத்து அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டுதான் வெளியில் செல்ல வேண்டும் என அறிவுறத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் முகக்கவசங்களை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், மருந்துக் கடைகளில் போதிய முகக்கவசங்கள் இல்லை. இதுதவிர ஒருசில கடைகளில் ரூ.10-க்கு விற்க வேண்டிய முகக்கவசம், 25 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.
இந்த நிலையில், பற்றாக்குறையைப் போக்கவும், அதிக விலைக்கு விற்பதைத் தடுக்கவும் மதுரை மத்திய சிறைச்சாலை நிர்வாகம் முகக்கவசங்கள் தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.
இதற்கான பணியில் தையல் கலை தெரிந்த 30 பெண் கைதிகளும், 10 ஆண் கைதிகளும் ஈடுபடுகின்றனர். ஒரு நாளைக்கு சராசரியாக 500 முகக்கவசங்கள் என்று இலக்கு நிர்ணயித்து, கைதிகள் திறம்பட செயலாற்றி வருகின்றனர்.
இதுதொடர்பாக மதுரை சரக சிறைத் துறை டிஐஜி பழனியிடம் கேட்டபோது, "எங்கள் சிறைக்கூடத்தில் தயாராகும் முகக்கவசங்கள் முதல்கட்டமாக போலீசாருக்கும், மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படும். அடுத்தபடியாக அரசு, தனியார் நிறுவனங்களுகக்கு ரூ.10 என்ற விலையில் முகக்கவசங்களை பெற்றுச்செல்லலாம்" என்றார்.