மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நரேந்திர மோடி ஆட்சியில் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை. நீட் தேர்வை கொண்டுவந்து மருத்துவப் படிப்பு படிக்க வேண்டும் என்ற நமது பிள்ளைகளின் விருப்பத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளார். சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டோர், விவசாயிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மோடியை தூக்கி எறிந்து ராகுல் காந்தியை பிரதமராக கொண்டு வந்தால் மட்டுமே தென்மாநிலங்களில் வளர்ச்சி ஏற்படும் என்ற முடிவோடு மக்கள் வாக்களித்துள்ளனர்.
இடைத்தேர்தல்களிலும் திமுக கூட்டணியே தமிழகத்தில் வெற்றி பெறும். வரும் மே 23 ஆம் தேதி கண்டிப்பாக திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெறும். தமிழகத்தை பொருத்தவரை மக்கள் மத்தியில் தமிழகத்தை நரேந்திர மோடி புறக்கணித்து விட்டார் என்று முடிவு செய்து திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். தற்போது வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ள புயலால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில், புதுச்சேரியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தவர்களை தகுதி நீக்கம் செய்துள்ளனர். இது சட்டப்பூர்வமானதா என்ற கேள்விக்கு, சபாநாயகர் தனி அதிகாரம் பெற்றவர். அதிமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் அவர்களை சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யும் வேலையை செய்திருக்கின்றார்கள். ஜனநாயக நாட்டில் சபாநாயகர் இதுபோன்று எல்லை மீறி செய்யக் கூடாது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்காமல் தகுதி நீக்கம் செய்தது தவறு என்பது எனது கருத்து என்று பதிலளித்தார்.