மதுரை:மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பணமாக்கலுக்கு எல்லையே இல்லையா? கூவி விற்பதற்கு வரலாறு என்ன கடைச் சரக்கா? என்ற கேள்வியை நான் எழுப்பி ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பி இருந்தேன்.
பிரசார் பாரதி அதன் வசம் உள்ள வரலாற்று ஆவணங்களை 'மின்னணு ஏலம்' விடப் போகிறது. இந்திய வரலாற்றின் நிகழ்வுகள் அதன் காலம், சூழல் சாராது தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அது தேசத்தின் அரசியல், அமைதி, சமாதானத்தை எதிர்மறையாக பாதிக்கக்கூடும். ஆகவே, கார்ப்பரேட் ஊடகங்கள் கைகளில் இதன் உரிமைகள் செல்வது அறிவார்ந்த செயலாக இருக்காது.
பிரசார் பாரதி சி.இ.ஓ-வின் முதல் வாதம், எம்.பி-க்குத் தவறான தகவல் தரப்பட்டுள்ளது. அவர் சொல்வதுபோல, எதுவும் நாங்கள் அறிவித்த கொள்கையில் இல்லை. எனது பதில் இது. அவர்களது கொள்கை ஆவணத்தின் தலைப்பே வளங்களை ஒன்று திரட்டல் மற்றும் பணமாக்கல் கொள்கை (Policy on Syndication and Monetisation) என்பதே.
இதுகுறித்த ஆங்கில தினசரி செய்தியில் 'இதில் சுதந்திரத்திற்கு முந்தைய நிகழ்வுகள், அரசியல் நிர்ணய சபை விவாதங்கள், நாடாளுமன்ற விவாதங்களும் உள்ளடங்கியது' என்று இடம் பெற்றுள்ளது. ஒன்று உங்கள் செய்தியில் தெளிவு தேவை அல்லது அந்த தினசரியின் செய்திக்கு மறுப்புத் தெரிவியுங்கள்.