தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 18, 2021, 10:45 PM IST

ETV Bharat / state

பிரசார் பாரதி சி.இ.ஓ சரியான பதில் தரவில்லை -  சு.வெங்கடேசன் எம்.பி., குற்றச்சாட்டு!

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களை ஏலத்தில் விடுவது தொடர்பாக பிரசார் பாரதியின் முயற்சியைக் கண்டித்து, தான் எழுப்பிய கேள்விகளுக்கு பிரசார் பாரதி சி.இ.ஓ சரியான பதில் தரவில்லை என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

பிரசார் பாரதி சி.இ.ஓ சரியான பதில் தரவில்லை
பிரசார் பாரதி சி.இ.ஓ சரியான பதில் தரவில்லை

மதுரை:மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பணமாக்கலுக்கு எல்லையே இல்லையா? கூவி விற்பதற்கு வரலாறு என்ன கடைச் சரக்கா? என்ற கேள்வியை நான் எழுப்பி ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பி இருந்தேன்.

பிரசார் பாரதி அதன் வசம் உள்ள வரலாற்று ஆவணங்களை 'மின்னணு ஏலம்' விடப் போகிறது. இந்திய வரலாற்றின் நிகழ்வுகள் அதன் காலம், சூழல் சாராது தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அது தேசத்தின் அரசியல், அமைதி, சமாதானத்தை எதிர்மறையாக பாதிக்கக்கூடும். ஆகவே, கார்ப்பரேட் ஊடகங்கள் கைகளில் இதன் உரிமைகள் செல்வது அறிவார்ந்த செயலாக இருக்காது.

பிரசார் பாரதி சி.இ.ஓ-வின் முதல் வாதம், எம்.பி-க்குத் தவறான தகவல் தரப்பட்டுள்ளது. அவர் சொல்வதுபோல, எதுவும் நாங்கள் அறிவித்த கொள்கையில் இல்லை. எனது பதில் இது. அவர்களது கொள்கை ஆவணத்தின் தலைப்பே வளங்களை ஒன்று திரட்டல் மற்றும் பணமாக்கல் கொள்கை (Policy on Syndication and Monetisation) என்பதே.

இதுகுறித்த ஆங்கில தினசரி செய்தியில் 'இதில் சுதந்திரத்திற்கு முந்தைய நிகழ்வுகள், அரசியல் நிர்ணய சபை விவாதங்கள், நாடாளுமன்ற விவாதங்களும் உள்ளடங்கியது' என்று இடம் பெற்றுள்ளது. ஒன்று உங்கள் செய்தியில் தெளிவு தேவை அல்லது அந்த தினசரியின் செய்திக்கு மறுப்புத் தெரிவியுங்கள்.

இதற்குப் பதில் அளித்த சி.இ.ஓ, 'அது தூர்தர்சனும், அகில இந்திய வானொலியையும் மின்னணுப் பதிவாக மாற்றி, எப்படி யூ-ட்யூப் ஒளிபரப்பாக ஆக்கப்பட்டுள்ளது' என்பதை பற்றியே ஏலம் விடப்படுவதாக கூறியுள்ளார்.

நீங்கள் ஆங்கில தினசரி இதழ் செய்தியை மறுக்கவில்லை. அதன் அடுத்த பத்தியிலேயே, வரலாற்று ஆவணங்கள் பற்றி பேசியதன் தொடர்ச்சியாக சி.இ.ஓ வார்த்தைகளிலேயே வணிக ஆர்வத்தை ஈடேற்ற 'ஒரு கட்டமைப்பு இல்லாததால் கொள்கை வடிவம் தேவைப்படுகிறது. அந்த கொள்கை மூலம் எந்த படைப்புகள் வளங்களாக ஒருங்கிணைக்கப்படலாம்; பணமாக்கப்படலாம்' என்பது குறித்தே இருக்கிறது.

'ஆவணப் படங்கள்' என்றால் அதற்குள் என்னென்ன இடம் பெறும் என்பது போன்ற விவரங்கள் இல்லையா? நமது ஒரே கேள்வி இதுதான். வரலாற்று ஆவணங்கள் எதையும் வணிக சரக்காக மாற்ற மாட்டோம் என்பதை உறுதிசெய்யவேண்டும். அரசியல் நிர்ணய சபை ஆவணங்களை பணமாக்க மாட்டோம் என்று சொல்லவேண்டும். விடுதலைக்கு முந்தைய - மைல் கல் நிகழ்வுகள் எல்லாம் கார்ப்பரேட் லாபங்களுக்கு அல்ல" எனக் கூறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:குரோம்பேட்டை ரயில் தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

ABOUT THE AUTHOR

...view details