மதுரை ரயில் நிலையத்தில் ரூ. 347.47 கோடி மதிப்பில் மறு சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. நிலப்பரப்பு கணக்கெடுப்பு, மண் பரிசோதனை, மரங்கள் மற்றும் போக்குவரத்து கணக்கெடுப்பு, அசையும், அசையா சொத்துக்கள் கணக்கெடுப்பு ஆகிய முன்னேற்பாட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. சீரமைப்பு பணிகளுக்காக நிலப்பரப்பில் உள்ள ரயில்வே பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு பணிகளுக்காக தயார் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் அலுவலகப் பணிகள், திட்ட மேலாண்மை பணிகள், பணிகள் சம்பந்தப்பட்ட பயனாளர்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. புறநகர் இல்லா ரயில் நிலைய குழுவில் இரண்டாவது பிரிவில் உள்ள மதுரைக்கு சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. இங்கு நாளொன்றுக்கு 96 ரயில்கள் கையாளப்பட்டு வருகின்றன. அதிகபட்சமாக தினந்தோறும் 51,296 பயணிகள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
ரூபாய் 347.47 கோடி மதிப்பிலான மறு சீரமைப்பு பணிகளுக்காக சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு செப்டம்பர் 22 அன்றே ஒப்பந்த பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. பணிகளைத் துவங்கி 36 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பணிகளை தொடர்ந்து கண்காணிக்க மும்பையை சேர்ந்த தனியார் திட்ட மேலாண்மை
சேவை நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. மதுரை ரயில் நிலையத்தின் கிழக்குப்புறமும் மேற்கு புறமும் நவீன வசதிகளுடன் இரு முனையங்கள் அமைய இருக்கின்றன. கிழக்கு நுழைவாயிலில் இரண்டு அடுக்கக வாகன காப்பகம், மேற்கு நுழைவாயிலில் ஒரு அடுக்கக வாகன காப்பகம் என மூன்று வாகன காப்பகங்கள் அமைய இருக்கின்றன.
ரயில் நிலையத்தையும் பெரியார் பேருந்து நிலையத்தையும் இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை, பார்சல்களை கையாள தனி மேம்பாலம், கிழக்குப் பகுதியில் உள்ள வாகன காப்பகங்களுக்கு செல்ல இரண்டு நடை மேம்பாலங்கள் அமைய இருக்கின்றன. கிழக்கு நுழைவுவாயில் ரயில் நிலைய கட்டிடம் இரண்டு மாடி கட்டிடமாக 22,576 சதுர மீட்டரில் அமைய இருக்கிறது. தரை தளத்தில் வருகை புறப்பாடு பயணிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு எளிதாக சென்று வரும்படி வசதிகள் அமைய உள்ளன. மேலும் உலகத்தரம் வாய்ந்த கழிப்பறைகள், பொருள் வைப்பறைகள், குழந்தைகளுக்கான வசதிகள், தாய்ப்பால் ஊட்டும் அறைகள், உதவி மையங்கள், பயணிகள் பயன்பாட்டு வணிக நிறுவனங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை அமைய இருக்கின்றன.