மதுரையைச் சேர்ந்த லயோனல் அந்தோணி ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்னைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை இருந்த காலகட்டத்தில் இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்கள் பலருக்கு பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இதில் தகுதியற்ற பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் உயர் மட்ட குழு விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையிலான உயர்மட்ட குழு, முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்து அறிக்கையளித்தது.
முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிண்டிகேட் துணைவேந்தருக்கு அதிகாரம் கொடுத்தது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், முறைகேடாக வழங்கப்பட்ட பதவி உயர்விற்கு தடை விதித்தும், உயர்மட்ட குழுவின் இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை உடனடியாக நிறைவேற்றவும் உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த மனுவை நேற்று (ஏப். 25) நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது, பல்கலைக்கழகம் தரப்பில் பதவி தொடர்பான மறு ஆய்வுக் கழகம் நடவடிக்கை இறுதிக்கட்டத்தில் உள்ளது. எனவே அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் எனக் கூறப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பான கூடுதல் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.